தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை (பாகம் 3)

தமிழர்களும் தமிழர் உழவுத்தொழிலும் விழிப்படைய வேண்டிய வேளை

sikkim_vc2

இன்று தேர்தல் நாள் .அனைவரும் வாக்குப் பதிவு செய்திருப்பீர்கள். நாம் இப்போது சொல்லவிருப்பது யாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அளித்த வாக்குகளைப்பற்றியோ கூற விரும்பவில்லை. நாம் தற்போது வேண்டுவதெல்லாம், இறைவா எங்கள் நாட்டில் ஆட்சியில் உட்காரும் அல்லது இருக்கும் நபர்களின் மனதில் புகுந்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி புரிய அருள் புரிய வேண்டுகிறோம்.எனென்றால் நாம் தேர்ந்தெடுக்கும் நபர்களின் மனம் பின்னால் பணத்தால் மனம் மாறினால் என்ன செய்வோம்.

எனவே  இறை நினைத்தால் சிக்கிம் உள்ளது போலவும் , நம் பக்கத்தில் உள்ள கேரளாவில் உள்ளது போலவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆளும் தலைமை ஆனால் நல்லது . நிச்சயம் ஆகும்.ஒரு கன்றை தேர்க்காலில் ஏற்றிக் கொன்றதற்காக தன் மகனையே தேர்க்காலில் ஏற்றிக் கொல்லத் தயங்காத மனு நீதிச் சோழன் ஆண்ட நாடுதான் இது . மக்களின் நலனையே கருத்தில் கொண்ட மன்னர்கள் ஆண்ட நாடு இது .

இதில் இவ்வளவு கோடிகளை சம்பாத்தியமாக சம்பாதிக்கும் இந்த அரசியல்வாதிகள் தோன்றியது எப்படி?கையளவு பணம் இருந்தால் அதற்கு நீ எஜமானன்? கழுத்தளவு பணம் இருந்தால் அது உனக்கு எஜமானன்?என்ற வார்த்தைகளை உண்மை என எப்போது இவர்கள் உணரப் போகிறார்கள் ? இறையே நீ எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது உண்மையானால் இவர்கள் உள்ளங்களிலும்  மக்களுக்கான நல்ல செயல்களைச் செய்ய வை?

ஆனந்த விகடன் top 10 பிரச்சனைகளில் , சூறையாடப்படும் இயற்கை வளங்கள் என்ற தலைப்பில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்களின் கட்டுரை

நிலக்கரி தொடங்கி டைட்டானியம் வரை, தமிழ்நாட்டில் இல்லாத கனிம வளங்களே இல்லை. ஆனால், அவை மக்களுக்குப் பயன்படவில்லை. தமிழ்நாடு திறந்துவிடப்பட்ட வேட்டைக்காடாகக் காட்சி அளிக்கிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் ஆலை அமைக்க, கோகோ-கோலா நிறுவனம் 2014-ம் ஆண்டு ஜனவரியில் ஒப்பந்தம் போட்டது. சிப்காட் விளைவித்த சுற்றுச்சூழல் பாதிப்புகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு இது மேலும் அதிர்ச்சியைத் தந்தது. ஏனெனில், கோகோ-கோலா ஆலை, நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் தண்ணீரை குளிர்பான ஆலைக்குப் பயன்படுத்தும். இதற்கு எதிரான மக்கள் போராட்டம் கடுமை அடைந்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் பணிகள் தொடங் காததைக் காரணம் காட்டி, கோகோ-கோலா நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அரசு என்ன காரணம் சொன்னாலும், கோகோ-கோலாவை விரட்டி அடித்தது, வலிமையான மக்கள் போராட்டம்தான்.

தாமிரபரணியில் இருந்து நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க 2005-ம் ஆண்டு அனுமதிபெற்றது கோகோ- கோலா நிறுவனம். 3 லட்சம் 10 லட்சமாகி, இப்போது 15 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கவும் 36 ஏக்கர் பரப்பில் ஆலையை விரிவாக்கவும் அனுமதி கோரியுள்ளது. நெல்லை, தூத்துக்குடியில் விவசாயத்தை விரிவாக்க தாமிரபரணி ஆற்றில் அணை கட்ட வேண்டும், விருதுநகர் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி நீரைத் திருப்பிவிட வேண்டும்… என மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் அப்படியே இருக்க, கோகோ கோலா நிறுவனத்துக்கு தாமிரபரணியைத் தாரை வார்த்து, 86 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கு வேட்டு வைக்கப்பார்க்கிறது அரசு.

கனிமவளக் கொள்ளையின் கதையோ, இன்னும் பதைபதைப்பைத் தருகிறது. மலைகளை வெட்டி, விழுங்கி, கிராமங்கள் காணாமல் அடிக்கப்பட்டு, மனநலம் குன்றியவர்களும் குழந்தைகளும் நரபலி கொடுக்கப்பட்ட கிரானைட் கொள்ளையின் கொடூரப் பக்கங்களை, ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த கிரானைட் சூறையாடலில் மட்டும் அரசுக்கு 1.06 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு.
மற்றொரு புறம், தாதுமணல் கொள்ளை. `அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருள் மோனோசைட் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டுள்ளது’ என்பது குற்றச்சாட்டு. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதிலும் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு. தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும் சுமார் 55 ஆயிரம் லாரிகளில் அன்றாடம் நடக்கும் ஆற்றுமணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு 19,800 கோடி ரூபாய்.

ஒரு தொழிற்சாலை தொடங்கி, பொருளை உற்பத்திசெய்து, ஆதாயம் பார்ப்பதைவிட இது வசதியானது. ஆம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால உழைப்பில் இந்த மண்ணின் மக்களால் சேமிக்கப்பட்ட வளங்களை சில பத்தாண்டுகளில் விற்று ஏப்பம்விடுவது எளிது ஆயிற்றே! இவர்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்துகின்றனர்; அரசு இயந்திரத்தை ஆட்டுவிக்கின்றனர்.  இவர்களைத் தடுத்து நிறுத்த, தட்டிக்கேட்க அரசு தயாராக இல்லை. அதற்கு மக்கள்தான் ஒன்றிணைய வேண்டும். ஏனெனில், இது மக்களின் வளம்; இயற்கையின் வளம். இதைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்தது.

புரட்சி விதைகளால் வாடிய பயிர்கள்????

விதை சார்ந்த கொள்கையில் (National Seed Policy) இன்றைக்கு எப்படி அமைச்சர்கள் பேசுகிறார்களோ, அப்படியே அன்றைக்கும் (60-களில்) பேசினார்கள்.

அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் எச்சரித்தும்கூட, அன்றைய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியன் வலுக்கட்டாயமாக ஐ.ஆர். ரக விதைகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தார்.

அன்றைக்கு ஒட்டு விதைகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எம்.எஸ். சுவாமிநாதன், இன்றைக்கும் மரபீனி மாற்ற விதைகளுக்கு ஆதரவான குரல் எழுப்புகிறார்.

ராக்பெல்லர் பவுண்டேஷன், ஃபோர்டு பவுண்டேஷன் ஆகியவற்றின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் இறக்கப்பட்டு உழவர்களிடம் வலுக்கட்டாயமாக வெளிநாட்டு விதைகளும் வேதி உரங்களும் திணிக்கப்பட்டன. இன்றைக்கு அந்த ராக்பெல்லர் பவுண்டேஷனின் இடத்தில் மான்சாண்டோ வந்துவிட்டது.

வரலாறு அப்படியே திரும்புகிறது. அன்று விதைகள் ஓரளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தன. அதனால் ஓரளவு தப்ப முடிந்தது. ஆனால் இப்போது, முற்றிலும் பன்னாட்டு கும்பணிகளின் கைகளில் சென்றுவிடும் ஆபத்து உள்ளது. இத்துடன் முடிவிப்பு (டெர்மினேட்டர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், நமது உள்ளூர் விதைகளும் மலடாகிப் போகும்.

ஒரு மக்கள் அறிவியலாளர்

ரிச்சாரியா என்ற மாபெரும் மக்கள் அறிவியலாளர் ஆயிரக்கணக்கான உள்நாட்டு ரக நெல் விதைகளைச் சேகரித்து வைத்திருந்தார். இந்திய மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக அவர் இருந்தபோது, நெட்டை ரகம் மட்டுமல்லாது நம் நாட்டுக்கே உரிய குட்டை ரகங்களையும் கண்டறிந்து வைத்திருந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதியைச் சேர்ந்த கடூர் சாலா (Gadur Sela – Bd:810) என்ற நெல் வகை ஹெக்டேருக்கு 9.8 டன் விளைச்சலைத் தர வல்லது. இப்பகுதி பழங்குடிகள் நிறைந்த பகுதி. அவர்களிடம்தான் எண்ணற்ற அரிய வகை விதைகள் இருந்தன, இருக்கின்றன. அந்த விதை வளத்தை இன்றைய மேலை நாட்டு அறிவியல் உலகம், அறிவியல் இல்லை என்று கூறுகிறது. இதேபோலப் பாடல் பூல் போன்ற குட்டை ரகம் இருந்துள்ளது. இவை நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டவை. இவற்றை ஆதரித்த ரிச்சாரியா, நோய் எதிர்ப்புத் தன்மையற்ற அந்நிய விதைகளை ஏற்க மறுத்தார்.

தவறான முடிவு

இந்திய வேளாண் சந்தையைக் கைப்பற்ற, அந்நிய விதைகளை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியை அமெரிக்கா ஏற்படுத்தியது.

இதற்குப் பல காலம் முன்பாகவே, இந்தியாவின் வேளாண்மை என்பது சிறு- குறு உழவர்களால்தான் உயிர்ப்புடன் இருக்க முடியும். ஜமீன்தார்களிடம் குவிந்து கிடக்கும் நிலங்கள் உழுபவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜே.சி. குமரப்பா, தற்சார்பை அழிக்கும் மையப்படுத்தப்பட்ட வேதி வேளாண்மையை மிகக் கடுமையாக எதிர்த்தார்.

ஆனால், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அந்நிய விதைகளை அனுமதித்தனர். அதனால் பெரும் பேரழிவு ஏற்பட்டது. துங்குரோ வைரஸ் என்ற நோய் தாக்குதலும், அதுவரை காணப்படாத பூச்சி தாக்குதலும் ஏற்பட்டன.

வாடிய பயிர்கள்

வீரிய விதைகள் எனப்படும் பசுமைப் புரட்சி விதைகள் அதிக அளவு உரம், நீர் போன்றவை தேவைப்படுபவையாக உள்ளன. ஏனெனில், இந்த விதைகள் கட்டுப் படுத்தப்பட்ட ஆய்வகங்களில் வைத்து உருவாக்கப்படுகின்றன. இவற்றைக் கொழுக்க வைப்பதற்காக அதிக அளவு வேதி உரங்களைக் கொட்ட வேண்டும்.

அறிவியல் முறைப்படி ஒரு செடியானது, சவ்வூடு பரவல் என்ற முறையில் தனக்கான ஊட்டங்களை நீர் வழியாக எடுத்துக்கொள்கிறது. ஊடுருவும் தன்மை கொண்ட ஒரு சவ்வினால் செறிவு அதிகமான நீர்மமும் செறிவு குறைவான நீர்மமும் பிரிக்கப்பட்டு இருந்தால், அச்சவ்வின் ஊடாகச் செறிவு குறைவான நீர்மத்தைச் செறிவு அதிகமான நீர்மம் ஈர்த்துக்கொள்ளும். இதுதான் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம்.

செடியில் அமைந்துள்ள பாகங்கள் யாவும் சில்லிகளால் (cell) ஆனவை. இவற்றின் சுவர், மேலே கூறிய சவ்வைப் போல அமைந்துள்ளது. இந்தச் சவ்வின் வழியாகச் செறிவு குறைந்த நீர் செறிவுமிக்க சில்லிச் சாறு மூலமாக ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. இந்த முறையில் பயிர்களின் வழியாக நீர் நகர்ந்து ஊட்டங்களையும் கொண்டு செல்கிறது.

இப்போது பாசன நீருடன் யூரியா போன்ற வேதி உப்புகளை இடும்போது, பாசன நீரானது செறிவுமிக்கதாக மாறிவிடுகிறது. இதனால் பயிர்களில் உள்ள நீர்மம் வெளியேறிவிடுகிறது. எப்போதெல்லாம் வேதி உரங்கள் போடப்படுகிறதோ அப்போதெல்லாம் செடிகள் வாடி நிற்பதைக் காண முடியும். இதை ஈடுசெய்வதற்காக அதிக அளவு நீர் பாய்ச்ச வேண்டும். இந்தப் பசுமைப் புரட்சி விதைகள் அதிகமாக வேதி உரங்களைச் சார்ந்து இருப்பதால், இவற்றின் தாக்கம் நீர் வளத்திலும் கைவைத்தது.

1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கறவைமாடும் அதற்குத் தேவையான தீவனம்வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின.

இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம்வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது….எவ்வளவு நல்ல திட்டம்.. அனைவராலும் பாராட்டப்பட்டு,.
உள்ளூர் மக்களிடம்சிறந்த வரவேற்பையும் பெற்றது….

“ஆனால் இந்தத் திட்டத்தின் terms & conditions என்னவெனில்

கொடுக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி (Jersey) மாடுகளின் உயிரணு (Sperm)மற்றும் மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்
என்பதே அந்தக் Conditions .

மாடு, நிலம் இலவசம்…அந்த நிலத்தில் வேலைபார்க்க ஊதியம்…யாருக்கு கசக்கும்… இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது….

திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணை சேராமலிருக்க
உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன.அதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை…இலவச மோகம்…ஆண்டுகள் உருண்டன…

செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானகப் பிறந்தன…

பத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை…ஒட்டுமொத்த இன அழிப்பு…பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட்பால் வாங்குகிறான்!!

1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது!!திட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன…..

கைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளைகளெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக.இது இலவசங்களுக்குப்பின் ஒளிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே…..

“There is no free lunch in the world” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு…. “இவ்வுலகில் எதுவும் இலவசமல்ல” என்பது அதன் பொருள்….

ஜல்லிக் கட்டைத் தடை செய்வதற்கு தமிழ்நாட்டுக் காளைகளை அழிப்பதற்கான அடித்தளமே இந்த தடை..

மரபணு மாற்றியே தீருவேன் என்று பல காலமாக கெஞ்சும் பன்னாட்டு கம்பெனிகளை ஊக்குவிக்க 51 திட்டங்களில், 40 பயிர்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது வேதனை அளிக்கின்றது.

http://www.livemint.com/Politics/RigT035yDIUp7uAfszLUVI/Govt-panel-cleared-80-genetically-modified-field-trials-sin.html

பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி

கடந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.

ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.

இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்

விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.ஏற்றுமதி தொடர்பான அனைத்து மானியங்களும் நிறுத்தப்பட வேண்டும். இதை வளர்ந்த நாடுகள் உடனே அமலுக்கு கொண்டு வரவும் வளரும் நாடுகள் 2018-க்குள் செய்து முடிக்க வேண்டும்.

எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, நாட்டின் சேவைத்துறைகளான தண்ணீர், மின்சாரம், பொது சுகாதாரம், காப்பீடு, கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் இது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

காட்ஸ், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தங்கள் குறித்து பொதுவெளியில் குறைந்தபட்ச விபரங்களை மட்டுமே பேசுகிற பத்திரிகைகள் இதற்கு இணையாக முன்வைக்கப்படும் மற்றொரு பேரழிவுத் திட்டமான TISA (Trade In Services Agreement) குறித்து வாய்திறக்க மறுக்கின்றன. வாய் திறக்கவும் முடியாது!

TISA ஒப்பந்தத்தின்படி WTO-GATS திட்டங்களை உறுப்பு நாடுகள் எதிர்த்தால், அதற்கு மாற்றாக அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளைத் திரட்டி அவற்றி்ன் மீதான பொருளாதாரச் சங்கிலியை இறுக்கிப் பிணைக்கும். இந்த வகையில் TISA முன்வைக்கும் செயல்திட்டம், உலகப் பொருளாதாரத்தை மேலும் அமெரிக்கக் கரடியின் பிடியில் தள்ளும் வகையில்  WTO-GATS ஆபத்தை விட படுபயங்கரமானதாக இருக்கப்போகிறது. TISA-ல் பங்கேற்கும் நாடுகள் அது குறித்து பாராளுமன்றங்களிலோ, பத்திரிகைகளிலோ, நீதி சட்ட அமைப்புகளிலோ TISA குறித்து விவாதிக்கக் கூடாதென விதிகள் போட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஏகாதிபத்திய அமெரிக்காவைப் பொறுத்தவரை WTO-GATS மற்றும் TISA மட்டுமே திட்டமல்ல. இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலகநாடுகளை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு மேலும் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

மோடி கும்பல் நைரோபி மாநாட்டிற்கு செல்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாகத்தான் பில்கேட்சும் ரத்தன் டாடாவும், “இந்தியாவில் 4.4 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்” என டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரை எழுதினார்கள்.

கருணையாளர்கள் பில்கேட்சும் ரத்தன் டாடாவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் மண்டகப்படிக்கே கட்டுரையாளர்களாக காட்சி தந்திருக்கிறார்கள் என்றால் பிரச்சனையின் கனமும் பரிமாணமும் எத்தகையதாக இருக்கும்?

“இந்தியாவின் மனிதவளம் மிகப்பெரிய சொத்து” என்று வரையறுக்கிற டாடவும் பில்கேட்சும் “பத்தில் நான்கு இந்தியக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்” என்று கவலையுற்றிருக்கின்றனர்.

கவலையுற்ற கையோடு சும்மா இருந்துவிடாமல், “புதிய ஊட்டச்சத்து அறிக்கை இந்தியாவில் குறை வளர்ச்சியை எதிர்நோக்குவதில் தலைமையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியிருக்கிறது (New nutrition report underscores the importance of leadership in addressing stunting in India)” எனும் தலைப்பில் மூன்று விசயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தரவுகள் முழுமையின்றி குறைபாட்டுடன் இருப்பதுடன், அவை காலவதியாகிப் போய்விட்டன. புதிய தரவுகளை எடுக்க வேண்டியது அவசியம்.

2. ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்கு விலைமலிவான திட்டங்கள் (cost-effective solution) எங்களிடம் இருக்கின்றன. அவை தாய்மார்கள் பிரசவித்த காலத்திலிருந்து குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை அதாவது 1000 நாட்களுக்கு மேம்பட்ட ஊட்டச்சத்தும் உடல்நலமும் கிடைக்க வழிவகை செய்யும்.

3. எங்களது திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் (prioritizing programmes) மத்தியிலும் மாநிலத்திலும் அரசுகள் தங்களது கடமையுணர்வை புரிந்துகொள்ளும் வகையிலும் (shared sense of responsibility) செயலாற்ற அரசியல் தலைமை (political leadership) தேவைப்படுகிறது.

மேற்கண்ட இம்மூன்றும் இந்திய விவசாயத்தை ஏகாதிபத்தியத்தின் கீழ் இறுதியாக மறுகட்டமைப்பு செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இது பற்றிய விளக்கக் கட்டுரை உலக வர்த்தகக் கழக மாநாடு நடைபெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே பிசினஸ் டைம்ஸில் வந்திருக்கிறது. இதன்படி, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவில் ஊட்டச் சத்து குறைப்பாட்டை ஆய்வு செய்வதற்கு நான்குவருட நிதி நல்கையாக 1.34 கோடி டாலர்களை (சுமார் ரூ 87 கோடி) டாடாவின் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறது.

இந்த அமைப்பு, இந்திய விவசாயக் கொள்கையை ஊட்டச்சத்திற்கு ஏற்ப முற்றிலும் மாற்றிமைக்கும் TARINA (Technical Assistance and Research for Indian Nutrition and Agriculture) எனும் திட்டத்தை முன்வைத்திருக்கிறது.

TARINAவிற்குத் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகமும், டாட்டா அறக்கட்டளையும் சேர்ந்து Tata-Cornell Agricultural and Nutrition Initiative (TCI) அமைப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

TARINAவின் நோக்கங்கள் உலக வர்த்தக் கழகத்தின் குரலாக அப்படியே ஒலித்திருக்கிறது. நைரோபியில் நடைபெற்ற WTO மாநாடு “இந்தியா இனி எந்தவொரு தானியத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ளக் கூடாது; அவற்றை சந்தைக்கு திறந்துவிட வேண்டும்” என்று சொல்கிற பொழுது TARINAவோ “ஊட்டச்சத்துக் மிகுந்த உணவு தானியங்கள் அனைவருக்கும் கிடைக்கும் படி திட்டம் வகுக்க வேண்டும்” என்று சொல்கிறது.

இரண்டாவதாக, “WTO விற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” என்று நைரோபி மாநாடு சொல்கிற பொழுது “ஊட்டச்சத்திற்கு ஏற்ப விவசாயத்தை மாற்றியமை” (to redesign agricultural projects with a focus on nutrition) என்று TARINA சொல்கிறது.

இந்த மாற்றியமைத்தல் திட்டம் இந்தியாவின் சகல விவசாயத்துறைகளையும் உள்ளடக்கும் விதமாக, தற்பொழுதும், வருங்காலத்திலும் விவசாயக் கொள்கைகள் பழங்கள், காய்கறிகள், கால்நடைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், பருப்பு வகைகள், உயர் புரதச் சத்து கொண்ட பயிர்களான பட்டாணி வகைத் தாவரங்கள் கிராமப்புற ஏழைகளுக்கு வருடம் முழுவதும் போய்ச்சேரும்படி அமைய வேண்டுமென வலியுறுத்துகிறது.

பில்கேட்ஸ்-டாடா முன்வைத்த இந்த டாரினா திட்டத்தைச் செயல்படுத்துபவர்களாக

புரவலர் என்ற பெயரில் மெலிண்டா-கேட்ஸ் அறக்கட்டளை,

தரகு வேலை பார்த்து தருபவன் என்ற பெயரில் டாடா சமூக அறிவியல் ஆய்வுக்கழகம்,

ஆராய்ச்சி செய்துகொடுக்க எமிராய் மற்றும் கார்னெல் பல்கலைக்கழகம்/ (வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியா வந்தால் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்),

பழங்குடியினரிடையேயும் ஒடுக்கப்பட்டவர்களிடையேயும் உள்ளே புகுந்து கனஜோராக வேலை செய்து தரவுகள் எடுக்க என்.ஜி.ஓ.க்களான BAIF மற்றும் CARE,

ஏகாதிபத்தியங்கள் மேற்பார்வையிட அகில உலக உணவுக்கொள்கைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (International Food Policy Research Institute)

என ஏகாதிபத்தியம் மற்றும் தரகுமுதலாளிகளின் வலுவான வலைப்பின்னல் இந்தியாவின் விவசாயத்தைச் சுற்றி இறுக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஒரு வரலாற்று நிகழ்ச்சி இன்னும் மேம்பட்ட சிக்கலான வடிவில் திரும்ப இந்திய அரசியல் அரங்கிற்கு வந்திருப்பதை நாம் தவறவிடாது கண்டுகொள்ள வேண்டும்.

இப்பொழுது ஊட்டச்சத்து குறைபாடு என்பதன் பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பில்கேட்ஸ் அறக்கட்டளை வடிவில் விவசாயத்தை மறுகட்டமைக்க முனைகிற பொழுது 1950-களில் இதே அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபோர்டு பவுண்டேசன் மூலமாக இந்திய விவசாயத்தை மறுகட்டமைக்கிறோம் என்று “இந்தியாவின் உணவு நெருக்கடியும் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை” என்பதன் பெயரில் அறிக்கை தாக்கல் செய்தனர். இவ்வறிக்கையில் “இந்தியாவில் உணவு இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால் உரங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” என்று இந்திய விவசாயத்தை பன்னாட்டுக் உரக் கம்பெனிகளின் இலக்காக மாற்றியமைத்தது.

இப்பொழுது எப்படி நாடு கடந்த கூட்டிணையக் குழுமங்களான பில்கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து டாடா டிரஸ் வரை ஊட்டச்சத்து, உலகவர்த்தகக் கழகம் என்ற பெயரில் ஜல்லியடிக்கிறார்களோ அன்றைக்கு ஃபோர்டு பவுண்டசனோடு சேர்ந்து உரங்களிலும் (ESSO) எண்ணெய் நிறுவனங்களிலும் பெரும் பங்கை வைத்திருந்த ராக்பெல்லர் பவுண்டேசன் உரம் தான் இந்திய விவசாயத்திற்கு முதன்மையானது என்று கூறி இந்திய விவசாய நிலங்களை மலடாக்கினர்.

இரண்டாவதாக, இப்பொழுது எப்படி உலகவர்த்தகக் கழகத்தின் நைரோபி மாநாடும் பில்கேட்ஸ்-டாடாவின் TARINA பரிந்துரைகளும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறதோ அதே போன்று 1960-களில் போர்டு பவுண்டேசன் முன்வைத்த அறிக்கைக்கு இணையாக 1964இல் பெர்னார்டு. ஆர். பெல் தலைமையிலான உலக வங்கிக்குழு, ஒட்டுமொத்த முதலீட்டு முன்னுரிமைகள் விவசாயத்தை நோக்கி ஒருங்கிணைக்கும்படி பரிந்துரைத்திருந்தது.

60-களில் ஏற்பட்ட பஞ்சம், பசி, பட்டினி ஆகியவற்றைக் காரணம் காட்டிய அமெரிக்க பன்னாட்டு உரக் கம்பெனிகளின் இலக்காக இந்தியா இருக்க சம்மதிக்கவும் இந்திய விவசாயத்தின் மூல உத்தி போர்டு பவுண்டேசன் முன் வைக்கும் பசுமைப் புரட்சியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனைகளாக வைக்கவில்லை. மேலும் சரிந்து நிற்கும் உலகப் பொருளாதாரத்தில் தங்கு தடையற்ற மூலதன பாய்ச்சலுக்காக இந்தியா தனது பணமதிப்பில் 36.5{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007} குறைத்துக் கொள்ளவும் ஆணையிட்டது (இன்றைக்கு மேக்-இன்-இந்தியா, எப்.டி.ஐ என்று சொல்கிற பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கிறது என்று யோசியுங்கள்).

1968 ஏப்ரல் 28 நியூயார்க் டைம்ஸ் இதுபற்றி எழுதும் பொழுது, “இவற்றைக் கண்ணிகள் என்று அழையுங்கள், அவற்றை ‘நிபந்தனைகள்’ என்று அழையுங்கள் அல்லது விருப்பத்திற்கேற்ப அழைத்துக் கொள்ளுங்கள், அமெரிக்கா தான் வழங்கும் உதவிக்காக உலகவங்கி மூலம் விதிக்கும் நிபந்தனைகளில் பலவற்றை ஏற்றுக் கொள்வதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் இல்லை. ஏனென்றால் இந்தியாவிற்கு செல்வதற்கு வேறு இடம் எதுவுமில்லை” என்று கொக்கரித்தது.

இன்றைக்கு இதே நிகழ்ச்சி நிரல் தோற்றுப்போன அரசுக்கட்டமைப்பு நெருக்கடிக்குள் ஊட்டச்சத்து எனும் பெயரில் மறுகாலனியாதிக்கத்தை துரிதப்படுத்த வந்திருக்கிறது.

நியூயார்க் டைம்ஸிற்கு பதிலாக, எகானமிக் டைம்ஸில், TARINA திட்டத்தை நடத்திக் கொடுக்கும் கார்னல் பல்கலைக் கழகம் பின்வறுமாறு கூறுகிறது.

“The Tata Trusts, India’s leading philanthropy, will support the consortium through their convening power and influence with policymakers at the national and state levels.”

இதன் அர்த்தம் “இந்தியாவின் முன்னணிப் புரவலராக இருக்கும் டாடா-சேவை அமைப்பு தேசிய அளவிலும், மாநில அளவிலும் கொள்கை உருவாக்குபவர்களை பணிய வைப்பதிலும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவைப்பதன் மூலமாக இக்கூட்டமைப்பிற்கு பங்களிக்கவிருக்கிறது” என்று கூறுகிறது.

இந்த வாக்கியத்தின் மூலம் 1960-களைப்போன்று இந்திய இறையாண்மை, அல்லது இந்தியா அல்லது பாராளுமன்றம் என்றெல்லாம் பேசவேண்டிய தேவை கார்னல் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிடவில்லை.

டாடாவிடம் சொல்லிவிட்டால் மற்றதை அவர் பார்த்துக்கொள்வார் என்று நேரடியாக இந்தியா எப்படி அமெரிக்காவின் காலனியாக இருக்கிறது என்பதை வெளிக் காட்டியிருக்கிறது.

அதாவது இனிமேலும் பாராளுமன்றம் என்றோ, மேக்-இன்-இந்தியா என்றோ , இறையாண்மை என்றோ பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை என்பது இதில் தெளிவாகியிருக்கிறது.

இவ்விதம் இந்திய விவசாயம் ஏகாதிபத்தியங்களின் நிரந்தரப்பிடியில் மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக முழுநிகழ்ச்சி நிரலும் WTO, GATS, TISA மற்றும் TARINAவாக வந்துவிட்ட பிறகு, இது யாருக்கான அரசு என்பது தெரிந்துவிட்ட பிறகு, மக்கள் செய்ய வேண்டிய வேலை என்னவாக இருக்க முடியும்?

இதை தூக்கியெறிந்துவிட்டு தங்களுக்கான மக்களே தங்கள் அதிகாரத்தை நிறுவிக்கொள்வது என்பதைத் தவிர வேறு நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவில் இடமில்லை.